தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள சோழகன்குடிகாட்டை சேர்ந்த விவசாயி சுந்தர்ராஜ் கஜா புயலில் தென்னை மரங்கள் நாசமானதால் தற்கொலை செய்து கொண்டார்.
தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அடுத்த சோழகன்குடிகாடு கிராமத்தில் தென்னை விவசாயி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கஜா புயல் காரணமாக 5 ஏக்கர் தென்னந்தோப்பில் இருந்த மரங்கள் முற்றிலும் சேதமடைந்ததால் மனமுடைந்த 55 வயதான தென்னை விவசாயி சுந்தர்ராஜ் என்பவர் விஷமருந்தி தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
தனது 5 ஏக்கர் தென்னந்தோப்பினால் வரும் வருமானத்தை வைத்து தனது குடும்ப தேவைக்கான உணவு உட்பட அனைத்து தேவைகளும் அவர் பூர்த்தி செய்து வந்துள்ளார். இந்நிலையில் கஜா புயல் காரணமாக அவரது தென்னந்தோப்பில் பயிரிட்டு வளர்த்து வந்த அனைத்து மரங்களும் வேரோடு சாய்ந்து நாசமாகின. இதன் காரணமாக கடந்த 6 நாட்களாக மனதளவில் மிகுந்த வேதனை அடைந்தார். மனமுடைந்த விவசாயி சுந்தர்ராஜ் இன்று காலை அருகில் இருந்த சுடுகாட்டிற்கு சென்று அங்கேயே விஷமருந்தி தற்கொலை செய்து கொண்டுள்ளார். அவர் அங்கேயே உயிரிழந்தார். இந்த சம்பவம் அக்கிராமத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஒரு தென்னை மரத்துக்கு நிவாரணமாக 500 ரூபாயும், அதை அகற்ற 600 ரூபாய், ஆகமொத்தம் 1,100 ரூபாய் என்ற மிகக்குறைந்த நிவாரணம் அளிக்கப்போவதாக தமிழக அரசு அறிவித்ததால் தான் தற்கொலை செய்து கொண்டுள்ளார் என்று அங்குள்ள மற்ற விவசாயிகள் வேதனையுடன் தெரிவித்தனர். தஞ்சை, பட்டுக்கோட்டை, பேராவூரணி உள்ளிட்ட மாவட்டங்கள் முழுவதிலும் 44 லட்சம் தென்னை மரங்கள் வேரோடு சாய்ந்துள்ளன. தென்னை மரத்துக்கான நிவாரண தொகையை உடனடியாக தமிழக அரசு கூடுதலாக அறிவிக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
|