நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம், தலைஞாயிறு, கீழையூர், கீழ்வேளுர் ஆகிய வட்டாரங்களில், கஜா புயலின்போது வீசிய பலத்த காற்று மற்றும் மழையால் வேளாண் மற்றும் தோட்டக்கலைப் பயிர்கள் பெரும் பாதிப்புள்ளாகின. பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்குவதற்கான முதற்கட்ட நடவடிக்கையாகப் புயல் சேத கணக்கெடுப்புப் பணி நடைபெற்று வருகிறது. கணக்கெடுப்புப் பணி முடிவுற்றதும் புயலால் பாதிக்கப்பட்டு சேதமடைந்த பயிர்கள் மற்றும் மரங்களுக்கான நிவாரணத் தொகையை விவசாயிகளின் வங்கிக் கணக்கில் வரவு வைக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு தெரிவித்திருந்தாலும், புயலால் சேதமடைந்த பல லட்சம் மரங்கள் வயல்களிலிருந்து வெளியே அகற்றுவது விவசாயிகளுக்குப் பெரும் சவாலாக உள்ளது.
இந்நிலையில், தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனம் மூலம் கூழ்மரங்களான சவுக்கு, தைல மரம் மற்றும் சூபா புல் மரங்களை விவசாயிகளிடமிருந்து நேரடியாகக் கொள்முதல் செய்திட நாகப்பட்டினம் மாவட்டத்தில் 5 இடங்களில் (அண்டர்காடு, குரவப்புலம், கத்திரிப்புலம், மருதூர் மற்றும் தகட்டுர்) தற்காலிக கொள்முதல் நிலையங்கள் அமைக்கப்பட்டு கொள்முதல் பணி நடைபெற்று வருகிறது. நேரடி கொள்முதல் நிலையங்களில் சவுக்கு மற்றும் தைல மரக்கட்டைகளை பட்டை உரித்து கட்டைகளாகக் கொண்டுவரும் பட்சத்தில் தைல மரக்கட்டைகளுக்கு டன் ஒன்றுக்கு 5,000 ரூபாய்க்கும், பட்டை உரித்த சவுக்கு மரம் டன் ஒன்றுக்கு 5,575 ரூபாய்க்கும் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.
விவசாயிகள் புயலால் சேதமடைந்த மரங்களை நேரடியாக ஆலை கொள்முதல் நிலையங்களுக்குக் கொண்டுவர முடியாதபட்சத்தில் நிறுவனத்தின் செலவில் அறுவடை செய்து பட்டை உரித்தல் மற்றும் போக்குவரத்து செலவினத் தொகை போக மீதமுள்ள தொகை விவசாயிகளின் வங்கிக் கணக்கில் தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனம் மூலம் நேரடியாகச் செலுத்தப்படுகிறது.
இப்பணிக்காக நாகப்பட்டினம் மாவட்டத்துக்கு நியமிக்கப்பட்டுள்ள தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவன அலுவலரான ரவி (94425 91408) அவர்களைத் தொடர்புகொண்டு விவசாயிகள் தங்கள் வயல்களில் கஜா புயலால் பாதிப்படைந்த மரங்களை நல்ல விலைக்கு விற்று பயன்பெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும், இப்பணியை இந்நிறுவனத்தின் பொது மேலாளர் ஆர்.சீனிவாசன் (94425 91411) இணைப்பு அலுவலராக இருந்து விவசாயிகளுக்கு உதவி செய்யத் தயார் நிலையில் இருப்பதாகவும் அதைப் பயன்படுத்தி விவசாயிகள் பயன்பெற்றுக் கொள்ளுமாறு தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவன செயல் இயக்குநர் தெரிவித்துள்ளார்.
சில மரவியாபாரிகள், செங்கல் சூளை அதிபர்கள் மற்றும் சில தனியார் சிமென்ட் நிறுவனங்கள் தென்னை மரங்களைத் தகுதிக்கு ஏற்ப வாங்கிக் கொள்வதாகத் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக நாகப்பட்டினம் விவசாயிகள் கீழக்கண்ட மர வியாபாரிகளைத் தொடர்பு கொண்டு பயன்பெறலாம்.
எம்.சண்முகம் - 94420 92459 / ஏபி.பன்னீர் - 98651 62405 / ஆர்.கமலக்கண்ணன் - 98942 31177 / எம்.சேகர் – 95857 81709 / சிற்றரசு – 94436 74584 / செல்லையா – 97869 25722
செங்கல் சூளை அதிபர்களை கீழ்க்கண்ட அலைபேசியில் தொடர்புகொண்டு விவசாயிகள் பயனடையலாம்.
திருச்சி பெரியசாமி – 98424 56632 / நாகப்பட்டினம் - வி.தமிழ்ச்செல்வன் – 99762 30302 / அல்ட்ரா டெக் சிமென்ட் நிறுவனம் - குமரவேல் - 94430 00800 என்பவரைத் தொடர்புகொண்டு தென்னை மரங்களை விற்பனை செய்யலாம்.
இது குறித்து தகவல் அறிய வேளாண்மைத் துணை இயக்குநர் (மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்) 94436 55270 அவர்களைத் தொடர்புகொண்டு பயன்பெறலாம்.
உழவன் செயலியில் பதிவு செய்ய
மேலும், கஜா புயலில் பாதிப்படைந்த மரங்களை அப்புறப்படுத்த விரும்பும் விவசாயிகள் இது குறித்து உழவன் மொபைல் செயலியில் தகவல் பதிவை செய்துகொண்டு பயன்பெறலாம். அம்மரங்களை நல்ல விலை கொடுத்து வாங்க விரும்பும் வியாபாரிகள் உழவன் மொபைல் செயலியில் உள்ள அந்தப் பதிவைப் பார்த்து கொள்முதல் செய்துகொள்ளலாம் என மாவட்ட ஆட்சித் தலைவர் சுரேஷ்குமார் தெரிவித்துள்ளார்.
Published Date : 04-12-2018 19:22:16
|