|
||||
கஜா புயல் பாதிப்பு: மத்திய குழு தமிழகம் வருகை; இன்று முதல் ஆய்வு |
||||
|
||||
கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்ய மத்திய உள்துறை இணை செயலாளர் டேனியல் ரிச்சர்டு தலைமையிலான மத்திய குழுவினர் தமிழகம் வந்துள்ளனர். இவர்கள் புயல் பாதித்த பகுதிகளில் 3 நாட்கள் ஆய்வு செய்வார்கள் என தகவல் வெளியாகியுள்ளது. கஜா புயல் தாக்கியதில் நாகை, திருவாரூர், புதுக்கோட்டை, தஞ்சை ஆகிய 4 மாவட்டங்கள் முற்றிலும் நிலை குலைந்துள்ளன. ராமநாதபுரம் உள்ளிட்ட 12 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டன. சூறாவளி காற்று, கன மழை காரணமாக வீடுகள், மரங்கள், மின் கம்பங்கள் எல்லாம் அடியோடு சாய்ந்தன. இந்த புயலுக்கு 63 பேர் இதுவரை உயிரிழந்துள்ளதாக தமிழக அரசு கூறியுள்ளது. கடும் புயலால் 3 லட்சத்துக்கும் அதிகமான வீடுகள், 88 ஆயிரம் ஏக்கருக்கு மேல் வேளாண் மற்றும் தென்னை உள்ளிட்ட தோட்டக்கலைப் பயிர்கள் சேதமடைந்துள்ளன. ஒரு லட்சத்துக்கும் அதிகமான மின் கம்பங்கள், மின் மாற்றிகள், துணை மின் நிலையங்கள் பாதிக்கப்பட் டன. பல மாவட்டங்களில் மின் விநியோகம், தொலைத் தொடர்பு முழுமையாக துண்டிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து மறு சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இதைத் தொடர்ந்து கடந்த 21-ம் தேதி டெல்லி சென்ற முதல்வர் கே.பழனிசாமி, பிரதமர் நரேந்திர மோடியை நேற்று முன்தினம் அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசி னார். அப்போது புயல் பாதித்த பகுதிகளில் நிரந்தரம் மற்றும் தற்காலிக சீரமைப்புக்கு ரூ.16,341 கோடி நிதி வழங்க வேண்டும். பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட மத்தியக் குழுவை அனுப்பி வைக்க வேண்டும் என்று கோரி மனு அளித்தார். முதல்வர் டெல்லியில் இருந்து தமிழகம் திரும்பும் முன்னதாக, மத்திய உள்துறை இணை செயலாளர் டேனியல் ரிச்சர்டு தலை மையில் மத்தியக் குழு அமைக்கப்பட்டது. இந்தக் குழுவினர் உடனடியாக தமிழகம் வந்து, புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஆய்வு நடத்தும் எனவும் தெரிவிக்கப்பட்டது. அதன்படி, டேனியல் ரிச் சர்டு தலைமையிலான குழு வினர் நேற்றிரவு சென்னை வந்தனர். டேனியல் ரிச்சர்டுடன் மத்திய நிதித்துறை செலவினப் பிரிவு ஆலோசகர் ஆர்.பி.கவுல், ஹைதராபாத்தில் உள்ள மத்திய வேளாண்துறை பொறுப்பு இயக்குநர் பி.கே.வத்சவா, ஊரக வளர்ச்சித் துறை துணை செயலாளர் மாணிக் சந்திரா பண்டிட், எரிசக்தித் துறை தலைமைப் பொறியாளர் வந்தனா சிங்கால் ஆகியோரும் சென்னை வந்தனர். இவர்களுடன், சென்னையில் உள்ள மத்திய நீர்வளத்துறை இயக்குநர் ஜெ.ஹர்ஷா, மத்திய சாலை போக்குவரத்து துறை செயற்பொறியாளர் ஆர்.இளவரசன் ஆகியோரும் இணைந்து கொண்டனர். மத்தியக் குழுவினர் இன்று காலை சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் கே.பழனிசாமியை சந்தித்து ஆலோசனை நடத்துகின்றனர். புயலால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து மத்திய குழுவினருக்கு தலைமைச் செயலர் கிரிஜா வைத்தியநாதன் விளக்குகிறார். இதையடுத்து, விமானத்தில் திருச்சி செல்லும் மத்திய குழுவினர், உடனடியாக ஆய்வுப் பணியை தொடங்குகின்றனர். அவர்கள் 2 அல்லது 3 குழுக்களாக பிரிந்து புயல் பாதித்த மாவட்டங்களுக்குச் செல்வார்கள் என்று தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவித்தன. எந்தெந்த பகுதி களுக்கு எப்போது செல்வார்கள், என்பது குறித்து இன்று முடிவு செய்யப்படும் என தெரிகிறது. மத்தியக் குழுவினருடன் தமிழக வருவாய் நிர்வாக ஆணையர் கே.சத்யகோபால், வருவாய்த் துறை உயர் அலுவலர்களும் செல்ல உள்ளனர். 26-ம் தேதி வரை 3 நாட்கள் ஆய்வு நடத்தும் மத்தியக் குழுவினர், மீண்டும் சென்னை வந்து முதல்வர், தலைமைச் செயலரை சந் தித்துவிட்டு, டெல்லி திரும்புகின்றனர். தங்கள் ஆய்வின் அடிப்படையில் சேத விவரங்களை மதிப்பிட்டு அறிக்கை தயாரித்து விரைவில் மத்திய அரசிடம் அளிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. |
||||
24 Nov 2018 11:15 AM | ||||
User Comments | |
|