விழுந்துகிடக்கும் இலட்சக்கணக்கான மின்கம்பங்களை அப்புறப்படுத்தி, புதிய மின்கம்பங்களை நடுவதற்கு அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. சீரமைப்புப் பணியில் ஈடுபட்டுள்ள மின்வாரிய ஊழியர்களுக்கு ஒவ்வொரு நாளும் மூன்றுமடங்கு சம்பளம் வழங்கப்படும் என்று அரசு அறிவித்தது நல்ல அணுகுமுறை. மின்வாரிய ஊழியர்களும் பல்வேறு சிரமங்களைப் பொறுத்துக்கொண்டு மின்கம்பங்களைப் பதிக்கப் போராடி வருகிறார்கள். அந்தக் கடைநிலை ஊழியர்களின் பணி அளப்பரியது. ஆனால், தேவைகளோடு ஒப்பிட்டால் களத்திலுள்ள அரசு பணியாளர்களின் எண்ணிக்கை குறைவே.
மின்கம்பம் நடுதலில், தொழில்நுட்பம் சாராத, மனித உழைப்பு(Labour work) மட்டும் தேவைப்படும் பணிகளில் ஈடுபட விருப்பம் உள்ள உள்ளூர்/வெளியூர் பொதுமக்களும் இப்பணிகளில் ஈடுபடலாம் என்று அறிவிப்பு கொடுத்தால் ஏராளமான பணியாட்கள் கிடைப்பார்கள்( அவசரம் கருதி மின்வாரிய ஊழியர்களுக்குக் கொடுப்பதைப்போல் நல்லதொரு தினக்கூலியை அவர்களுக்கும் கொடுக்கவேண்டும்.). போதிய மரம் அறுக்கும் உபகரணங்கள் கொடுத்து, வீழ்ந்து கிடக்கும் மரங்களை அப்புறப்படுத்தவும் இந்தத் தற்காலிகப் பணியாளர்களைப் பயன்படுத்தலாம். இவர்களிடம் வேலை வாங்குவது, இவர்களுக்கு முறையாக தினக்கூலி கொடுப்பது போன்றவற்றில் நடைமுறை சிக்கல் நிறைய இருக்கிறது என்றாலும், இதுபோன்ற வழியில் மேலும் பல்லாயிரக்கணக்கான தற்காலிகப் பணியாளர்களைக் களமிறக்காவிட்டால் அறுந்து கிடக்கும் மரங்களையும், மின்கம்பங்களையும் சீரமைக்க மாதங்கள் பல ஆகிவிடும். இராணுவத்தின் உதவியையும் கோரிப்பெற்றால் சீரமைப்புப் பணிகள் இன்னும் விரைவாக நடைபெறும். (சென்னையில் உள்ளதுபோல் பூமிக்கடியில் மின்சார கேபிள்களை பதிக்கும் திட்டம் குறித்து பரிசீலப்பது அவசியமாகிறது. இல்லையேல், இப்போது நடப்படும் மின்கம்பங்கள் அடுத்த புயலில் சாய்ந்துவிடும்!!)